புத்துயிர்ப்பு/லியோ டால்ஸ்டாய் நாவல்/முதல் பாகம்/அத்தியாயம் 4,5
4
காப்பி சாப்பிட்டு முடித்ததும் நெஹ்லூதவ், எத்தனை
மணிக்கு நீதிமன்றத்துக்குப் போக வேண்டுமென்று அழைப்பாணையை எடுத்துப் பார்ப்பதற்காகவும், இளங் கோமகளுக்குப் பதில் எழுதுவதற்காகவும் தமது அறைக்குச் சென்றார். அங்கே செல்ல அவர் தமது கலைக்கூடத்தைக் கடக்க வேண்டி.யிருந்தது. கலைக்கூடத்தில் இன்னும் நீட்டி முடிக்கப் பெறாத
உருவச் சித்திரம் ஒன்று நிலைச்சட்டத்தில் இருந்தது.
நேர் எதிரே சுவரில் சில ஓவிய உருவரைகள் தொங்கின.
இரண்டு ஆண்டுகளாய் அவர் பாடுபட்டு வந்திருந்த அந்த
உருவச் சித்திரமும், பிறகு அந்த உருவரைகளும், அந்த ஓவியக்கூடம் அனைத்துமே, ஓவியக் கலைதமக்குக் கைவராத ஒன்றெனச் சிறிது காலமாய் அவர் மனத்துள் எழுந்து வந்த எண்ணத்தை உறுதிப்படுத்துவனவாய் நினைத்தார் அவர். கலையில் தமது உணர்வு நிலை வெகுவாய் உயர்ந்து விட்டதால்தான் இப்படி ஓர் எண்ணம் ஏற்படுவதகாகத் தமக்குத் தாமே
அடிக்கடி விளக்கம் கூறிக் கொண்டார் என்றாலும், இந்த
எண்ணம் அவரை விட்டகலாது வருத்தி வந்தது. ஏழு ஆண்டுகளுக்கு முன்பு அவர் கலைத் துறையில்
தமக்கு அபார வல்லமை உண்டென்ற திட நம்பிக்கையுடன் இராணுவச் சேவையை விட்டு விலகி வெளியே வந்தார். கலைப் பணியின் உயா் சிகரங்களிலிருந்து பார்த்த போது
அவருக்கு ஏனைய எல்லாப் பணித்துறைகளும் இகழ்ச்சிக்குரியனவாய்த் தோன்றின. ஆனால் இப்படிப் பார்ப்பதற்குத்
தமக்குத் தகுதி இல்லையென இப்போது தெரிய வந்தது.
இதைப் பற்றி நினைவு படுத்தியவை யாவும் அவருக்குக் கசப்பூட்டுவனவாக இருந்தன. கலைக்கூடத்தின் ஆடம்பர அமைப்புகளை வேதனையுடன் உற்று நோக்கியபடி ஊக்கமின்றித்
தமது அறைக்குப் போய்ச் சேர்ந்தார். அவருடைய அறை பெரிதாகவும் பிரமாதமாகவும் இருந்தது, எல்லா வசதிகளோடும் எழிலும் சொகுசும் மிக்கதாக இருந்தது. அங்கிருந்த பெரிய மேசையில் 'அவசர'மென்று குறிக்கப்பட்ட உறையிலிருந்த நீதிமன்ற அழைப்பாணையை நெஹ்லூதவ் வெளியே எடுத்தார், பதினொன்று மணிக்கெல்லாம்
அவர் நீதிமன்றத்தில் இருக்க வேண்டுமென்று அதில் குறிக்கப்பட்டிருந்தது. பிறகு அவர் அந்த மேஜைக்கு எதிரே அமர்ந்து இளங் கோமகளுக்குப் பதில் எழுதினார். அவளது அழைப்புக்காக நன்றி தெரிவிப்பதாகவும் இரவுச் சாப்பாட்டின் போது அவளிடம் வந்து சேர முயலுவதாகவும் எழுதினார். இதை எழுதி முடித்ததும் இந்தப் பதில் அளவு மீறிய நெருக்கத்தை உணர்த்துவதாக இருக்குமென நினைத்து இதைக் கிழித்தெறிந்தார். வேறொரு பதிலை எழுதினார், ஆனால் அது அளவு மீறி முரடாகவும், மனத் தாங்கல் உண்டாக்கக் கூடியதாகவும் கூட இருக்கவே அதையும் அவர் கிழித்தெறிந்கார். பிறகு சுவரிலிருந்த மணியின் பொத்தானை அழுத்தினார்.
அவருடைய பணியாள் அறைக்குள் வந்து நின்றான்--வெளுக்காத கோடித் துணியில் மார்பங்கி அணிந்த முதியவன். கிருதாவைத் தவிர முகம் சுத்தமாக மழிக்கப்பட்டுச் சோகத்
தோற்றமுடையவன்.
"எனக்கு வண்டி கொண்டுவரச் சொல்லு."
“இதோ சொல்கிறேன்.”
"அப்படியே, பதிலுக்காகக் காத்திருக்கிறாளே கர்ச்சாகின் வீட்டுப் பணிப்பெண், அவளிடம் சொல்லு: நன்றி தெரிவிக்கிறேன் என்றும், வர முயலுவேன் என்றும் கூறும்படிச் சொல்லு.”
"இதோ சொல்கிறேன்".
'பணிவன்பு மிக்கதாய் இல்லைதான், என்ன செய்வது?
எழுத முடியவில்லை என்னால். இருக்கட்டும், அவளிடம்தான்
நேரில் போகப் போகிறேனே' என்று மனத்துக்குள் சொல்லிக்கொண்டு, மேல் கோட்டை எடுப்பதற்காகச் சென்றார். மேல் கோட்டைப் போட்டுக் கொண்டு அவர் வெளியே வாயில் முகப்புக்கு வந்து சேர்ந்தபோது, அவருக்குத் தெரிந்த வாடகை வண்டிக்காரன் ரப்பர் டயர் வண்டியுடன் வாயிலுக்கு முன்னால் காத்திருந்தான்.
"நேற்று இரவு கோமகன் கர்ச்சாகின் வீட்டிலிருந்து நீங்கள் புறப்பட்டு ஒரு நிமிடங்கூட இருக்காது, வண்டியைக்
கொண்டுவந்திருந்தேன்'' என்று அந்த வண்டிக்காரன், வெயிலில் பழுப்பேறிய பருத்த கழுத்துவெள்ளைச் சட்டைக் காலருக்கு மேல் தெரிய,ஒருக்களித்து அவர் பக்கம் திரும்பி,
“ஐயா இப்பதானே போனாருன்னு சொன்னான் வாயிலாள்”:
என்றான்.
'கர்ச்சாகின் குடும்பத்துடன் எனக்குள்ள உறவு வண்
டிக்காரர்களுக்குங்கூடத் தெரிந்திருக்கிறது' என்று நினைத்துக் கொண்டார். நெஹ்லூதவ். இளங் கோமகள் கரா்ச்சாகினாவை மணந்து கொள்வதா, இல்லையா என்று சிறிது காலமாய் அவரை வருத்தி வந்த அந்தக் கேள்வி மீண்டும் அவர்
முன்னால் எழுந்தது. இந்தக் காலத்தில் அவரை எதிர்நோக்கிய மிகப் பல கேள்விகளையும் போல இதுவும். உண்டு அல்லது இல்லையென அவரால் தீர்மானத்துக்கு வர முடியாத
சங்கடமான கேள்வியாகவே இருந்தது.
Comments
Post a Comment